விபத்துக்கு பின் வனத்துறை விழிப்பு

தீவுகளில் ஆட்களை தங்க வைத்து, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள, அரசுக்கு வனத்துறை பரிந்துரை செய்துள்ளது. ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தில் டிச. 26ல் நடந்த படகு விபத்தில் பலர் பலியாகினர். அருகில் உள்ள முள்ளித்தீவுக்கு அனுமதியின்றி சுற்றுலா சென்ற போது நிகழ்ந்த இவ்விபத்திற்கு, போதிய கண்காணிப்பு இல்லாதது முக்கிய காரணம். மன்னார் வளைகுடாவின் 21 தீவுகளும் வனத்துறையின் கண்காணிப்பில் இருப்பதால், இச்சம்பவம் நெருக்கடியை தந்துள்ளது. இதிலிருந்து விடுபடும் விதமாக, வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். முதற்கட்டமாக தீவுகளை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது வனத்துறை வசம் உள்ள 52 பார்வையாளர்களால், தீவுகளை முழுமையாக கண்காணிக்க முடியாது. ஆட்கள் தேர்வு செய்து, தீவுக்கு இரண்டு பேரை தங்க வைக்க உள்ளனர். அதற்கான கட்டமைப்பு வசதி செய்து தரப்படும். தீவுகளை ஒன்றிணைக்கும் பாதுகாப்புக்கு ஐந்து அதிவேக படகுகள் வாங்க உள்ளனர். நாட்டு படகுகளை பயணத்திற்கு கொண்டு செல்வதை தடுக்க, மீனவர்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வனஉயிரினக்காப்பாளர் சுந்தரக்குமார் கூறியதாவது: தீவுகளில் ஆட்களை தங்க வைத்து பாதுகாக்க உள்ளோம். இதற்காக புதிதாக ஆட்களை தேர்வு செய்யும் பணி நடக்க உள்ளது. அதிவேக படகுகள் கேட்டு அரசுக்கு பரிந்துறைத்துள்ளோம். கல்லூரி மாணவர்கள், என்.ஜி.ஓ.,களை வைத்து கடலோர கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களின் படகுகளும் கண்காணிக்கப்படும், என்றார். இவற்றை வனத்துறையினர் முன்கூட்டியே நடைமுறைப்படுத்தியிருந்தால், உயிர்பலியை தவிர்த்திருக்கலாம்.
- தினமலர் -