புதிய வாக்காளர்களாக விண்ணப்பித்தவர்கள்... ஏமாற்றம்

அடையாள அட்டை பெற அலைமோதும் மக்கள்


தேர்தல் வருவதை முன்னிட்டு வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பித்தும் ,சரியான தகவல் கிடைக்காமலும் விசாரணை செய்ய முடியாத காரணத்தை கூறி, தள்ளுபடி செய்வதாக கூறப்படுவதால் மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். தேர்தல் அடையாள அட்டை மக்களுக்கு பல்வேறு வகைகளில் பயனுள்ளதாக இருப்பதால் அடையாள அட்டை பெறுவதற்கு மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் தேர்தலின் போதுதான் அடையாள அட்டைகள் வழங்கும் பணி துரிதமாக இருக்கும் என்பதால், தேர்தல் நேரத்தில் புதிய வாக்காளர்களுக்காக விண்ணப்பிப்போர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது.

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாக முகாம்கள் அமைத்து புதிய வாக்காளர்கள் சேர்க்கை, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், போட்டோ மாற்றம் போன்ற பல்வேறு பணிகளை செய்தனர். இம்முகாம்களில் புதிய வாக்காளர்களுக்கு விண்ணப்பித்தவர்கள் பின் சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்தவர்கள் புதிய அடையாள அட்டை வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தபோது பலருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பலமுறை விண்ணப்பித்தும் கிடைக்காதவர்களும் உண்டு. அதுவும் கடைசியாக நடந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பம் கொடுத்தவர்களுக்கு ஒப்புகை சீட்டும் வழங்காததால் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா , குப்பைகளுக்கு சென்றதா என தெரியாத நிலையில், தினமும் மக்கள் தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் என நடையாய் நடக்கின்றனர். இதுகுறித்து சரியான தகவல் கூறுவதற்கும் ஆட்கள் இல்லாத நிலையில், நீண்ட தூரத்தில் இருந்து வருவோர் தேர்தல் அடையாள அட்டை கிடைக்காமலும், எப்போது கிடைக்கும் என்ற பதிலும் இல்லாததால் ,மிகுந்த மனவேதனை அடைகின்றனர்.

தேர்தல் பிரிவு அலுவலகத்தில் கேட்கும்போது ,""பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து கடைசி தினத்தில் முடிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளதே தவிர, விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க வேண்டும் என கூறவில்லை என்ற மழுப்பலான பதிலை கூறுவதால்,'' பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

-தினமலர்-