எடையளவு சட்டத்தை பின்பற்றுவதில் "கல்தா' : 70 வணிகர்கள் மீது முரண்பாடுகள் பதிவு

ராமநாதபுரத்தில் எடையளவு சட்டத்தை பின்பற்றுவதில் "கல்தா' தருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. நகராட்சிகளான ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கீழக்கரையில் இதன் தாக்கம் அதிக அளவில் உள்ளது. பொருட்கள் விற்பனையில் எடை என்பது நுகர்வோருக்கு அவசியமானதாகும். பெரும்பாலான கடைகளில் எடை போடுவதில் குளறுபடிகள் இருந்து வருகிறது. எலெக்ட்ரானிக் தராசுகள் புழக்கத்தில் வந்தும், இவை தொடர்வது தான் வேதனைக்குறியதாகும்.


காய்கறி, மீன், பழம், மட்டன், கோழி இறைச்சி கடைகளில் அதிக அளவில் எடையளவு சட்டம் மீறப்படுகிறது. இதனால் நுகர்வோரின் பணம் ஏமாற்றப்படுவதுடன், குறைந்த தேவையை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். மாவட்டத்தில் இது குறித்த ஆய்வுகள் குறைவாக நடக்கிறது. எப்போதாவது அதிகாரிகள் உத்தரவிடும் போது தான் இங்குள்ள அதிகாரிகள் ஆய்வுக்கு புறப்படுகின்றனர். அவ்வாறு செல்லும் போது, கைக்கு அடங்காத அளவுக்கு போலிகள் சிக்குகின்றன . இதே ஆய்வை முறைப்படி தொடர்ந்தால், மாவட்டத்தில் நிச்சயம் தரமான பொருட்கள் புழக்கத்தில் வர வாய்ப்புள்ளது. கடந்த வாரம் கலெக்டர் ஹரிஹரன் உத்தரவின் படி மாவட்ட தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வாளர் அய்யனார் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.

தங்கச்சிமடம், ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி பகுதியில் நடந்த ஆய்வில் , தரம் இல்லாத, மறுமுத்திரையிடாமல் வியாபாரத்தில் பயன்படுத்தி 125 பொருட்களை பறிமுதல் செய்தனர். மறுமுத்திரையிடாத எடையளவு பயன்படுத்திய காரணத்திற்காக 42 வணிகர்கள் , பொட்டலப்பொருட்கள் விதிகளை அனுசரிக்காத 28 வணிகர்கள் மீது மேல்நடவடிக்கைக்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவை தொடர்ந்து மேற்கொண்ட இந்த ஆய்வில் 70 வணிகர்கள் சிக்கியுள்ளனர். வாரந்தோறும் ஒவ்வொரு பகுதியாக தேர்வு செய்து இது போன்ற ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் நுகர்வோரின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

-தினமலர்-