ராமநாதபுரம் மாவட்டத்தில் கடைகளை உடைத்தும் நூதன முறையிலும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பொது மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் திருட்டு, வழிப்பறி, வீடுபுகுந்து கொள்ளை போன்ற சம்பவங்கள் சீசன் போல் குறிப்பிட்ட காலத்தில் அதிகமாக நடக்கிறது. கடந்த சில மாதங்களாக டாஸ்மாக் கடைகளை குறிவைத்து சில கும்பல் தங்கள் கைவரிசையை காண்பித்து வந்தன . கடைகளில் திருடப்பட்ட பணம் கணக்கு காண்பிக்க நடந்த முயற்சி என ஒருபக்கம் கூறினாலும், திருடர்களை பிடிக்கமுடியாத சூழலில் இதுபோன்ற ஏதாவது ஒரு தகவல்களை பரப்பிவிடும் டெக்னிக்குகளையும் போலீசார் வைத்துள்ளனர்.
இந்நிலையில்தான்,கடந்த தினங்களுக்கு முன் ராமநாதபுரம் காய்கறி மார்க்கெட் சந்தில் உள்ள ஒரு சூப்பர்மார்க்கெட் கடையில், ஆரவாரமின்றி கடை கதவை திறந்து சாவகாசமாக பணத்தை திருடி சென்றுள்ளது ஒரு மர்ம கும்பல். இதேபோல் போஸ்ட் ஆபீஸ் தெருவில் ராமதாஸ் என்பவரின் நகை பட்டறையில் 11 ஜோடி கொலுசு, வெள்ளி என கையில் கிடைத்ததை வாரி சுருட்டி சென்றது. இதுபோன்று கடைகளை குறிவைத்து திருடும் சம்பவம் கடந்த சில மாதங்களாக ராமநாதபுரம் பஜார் பகுதியில் அதிகரித்து வருகிறது. திருட்டு குற்றவாளிகளை பிடிப்பதில் வழக்கம் போல் போலீசார் மந்தநிலையில் இருந்தாலும், குற்றவாளிகளை பிடிக்க அதிகம் செலவாகிறது என கூறி, பறிகொடுத்தவர்களிடமே கணிசமாக கறந்துவிடுகின்றனர்.
ஏற்கனவே பொருளையும் பணத்தையும் பறிகொடுத்தவர்கள் ,போலீசாரின் வசூலுக்கும் பயந்து எங்கே கொடுக்காவிட்டால், மேலும் திருட்டு அதிகரிக்குமோ என்ற அச்சத்தில் கேட்பதை கொடுக்கும் நிலையில் உள்ளனர். முன்பெல்லாம் அவசர போலீஸ் இரவு பகலாக ரோந்து சுற்றிவந்து திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடித்து சாதனை படைத்தனர். தற்போது அவசரபோலீஸ் இருக்கிறார்களா? ரோந்து சுற்றுகிறார்களா என்பதே தெரிவில்லை. இதன்காரணமாகத்தான் தற்போது திருட்டு சம்பவங்கள் சர்வசாதரணமாக அதிகரித்து வருகிறது.
தினமலர்