வி.ஏ.ஒ., தாலுகா அலுவலகங்களை சுற்றி ஏஜன்டுகள் போல் டேரா

கிராமங்களில் அலுவலகங்களை வைத்து கொள்ளாத வி.ஏ.ஒ.,க்கள் , தாலுகா அலுவலகத்தை சுற்றி ஏஜன்டுகள் போல் தனியார் கட்டடங்களில் வாடகை அறையில் அலுவலகத்தை வைத்துள்ளதால், மக்கள் சான்றிதழ் பெற ராமநாதபுரம் வரும் நிலை தொடர்கிறது.



கிராமப்பகுதிகளில் அலுவலகங்கள் அமைத்து மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் பெறுவதற்கு வி.ஏ.ஒ.,க்கள் உதவ வேண்டும். இதற்காக கிராமங்களில் வி.ஏ.ஒ., அலுவலக கட்டடங்களை அரசே கட்டி கொடுத்துள்ளது. ஆனால் தற்போது கிராமங்களில் உள்ள வி.ஏ.ஒ.,க்கள் பலர் நகரங்களில் உள்ள லாட்ஜ்களில் அறை எடுத்து அலுவலக பணிகளை பார்க்கின்றனர். (அறைக்கு வாடகை யார் கொடுக்கின்றனர் என்பது தனி கேள்வி) தற்போது விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் போன்றவைகளுக்கு சிட்டா வாங்கவும், மாணவர்கள் சாதி சான்றிதழ் வாங்கவும், கர்ப்பிணி உதவி தொகைக்கு சான்றிதழ் பெறவும் முயற்சிக்கும் போது, லாட்ஜ்களில் உள்ள வி.ஏ.ஒ.,க்களை பஸ்சில் சென்று பார்த்து வாங்க வேண்டிய அவலநிலையில் உள்ளனர். பஸ்சில் பயணித்தும் வி.ஏ.ஒ., இல்லை என்றால் இரண்டு மூன்று முறை அலைய வேண்டிய அவலநிலையில் உள்ளனர்.



முதியோர் ஓய்வூதியம் வாங்குவோர் வயதான காலத்தில் பஸ் பிடித்து செல்ல மிகுந்த சிரமப்படுகின்றனர். சில இடங்களில் லாட்ஜ்களில் வி.ஏ.ஒ.,க்கள் தங்களுக்கு என இரண்டு மூன்று உதவியாளர்களை வைத்து கொண்டு தனி வசூல் வேட்டையும் நடத்துகின்றனர். ராமநாதபுரத்தில் வழிவிடுமுருகன் கோயில் அருகே உள்ள தனியார் கட்டடத்திலும் வண்டிக்கார தெருவில் படக்கடை அருகில் உள்ள தனியார் கட்டடத்திலும் இதுபோல் ஏராளமான வி.ஏ.ஒ.,க்கள் அறை எடுத்து அலுவலகம் நடத்துகின்றனர். ராமநாதபுரம் தாலுகா அலுவலகம் அருகிலே, இதுபோல் நடக்கும் கூத்தை தாசில்தாரும் கண்டுகொள்ளவில்லை, கலெக்டரும் நடவடிக்கை எடுப்பதில்லை. சான்றிதழுக்காக அலைய வைப்பதால் மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். சில இடங்களில் அதிகாரிகளின் பெயரை கூறி பங்கு தரவேண்டும் என்ற பெயரில், வி.ஏ.ஒ.,க்கள் தங்கியிருக்கும் லாட்ஜ்களில் புரோக்கர்கள் ஆதிக்கமும் அதிகரித்துவிட்டது. இதன் மீது மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி, அந்தந்த கிராமங்களில்வி.ஏ.ஒ.,க்கள் தங்கி அலுவல்களை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர்