மூன்று பள்ளிகள் உள்ள ராமநாதபுரம் ஒன்பதாவது வார்டு பகுதியில் மழைநீரும் கழிவுநீரும் தேங்கி மாணவர்கள் விழுந்து செல்லும் அவலத்தால் மக்கள் அதிருப்தியில் உள்ள நிலையில், கார் வரமுடியாததால் வரமுடியாத நிலையில் உள்ளதாக மக்கள் பிரதிநிதிகள்கூறும் நிலையில் ,தேர்தலின் போது மட்டும் வருவது எப்படி சாத்தியமாகிறது என மக்கள் கேள்விவிடுக்கின்றனர்.
ராமநாதபுரம் நகராட்சியில் மழை காரணமாக மக்கள் கடும் அவஸ்தைப்பட்டாலும் ஆறுதல் கூறகூட மக்கள் பிரதிநிதிகள் வராலையே என்கின்றனர் மக்கள். கேணிக்கரை ஒன்பதாவது வார்டு செட்டிய தெருவில் மழைநீரானது கழிவுநீருடன் கலந்து, இடுப்பளவு தண்ணீர் ரோட்டில் ஓடுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் நடந்து செல்வோரும் தடுமாறி விழுந்து செல்கின்றனர். இதுகுறித்து
இப்பகுதி மக்களின் ஆதங்கம் :
சூரியமூர்த்தி: இப்பகுதியில் மூன்று பள்ளிகளுக்கு தினமும் இவ்வழியாக ஆயிர கணக்கான மாணவ மாணவிகள் செல்கின்றனர். ரோட்டில் நிற்கும் தண்ணீல் மாணவிகள் தினமும் விழுந்து செல்வதை பார்க்க பரிதாபமாக உள்ளது. கவுன்சிலரிடம் கூறினால் சண்டைக்கு வருவது போல் பேசுகிறார்.
சதிஷ்குமார்: ஆயிர வைசிய சமூகநலசங்கம் சார்பில் மனு கொடுத்தும் சரியான நடவடிக்கை இல்லை. மக்கள் பிரதிநிதிகள் யாரும் இப்பகுதி மக்களின் அவலத்தை காணகூட வரவில்லை. கேட்டால் கார் வரமுடியாத பகுதிகளில் இறங்கிவரமுடியாதாம். மாணவ மாணவிகளின் நலன் கருதியாவது பார்வையிட வந்திருந்தால் மக்கள் ஒரளவு ஆறுதலாக இருந்திருப்பர்.
கமலகண்ணன்: ஆண்டுதோறும் இதே பிரச்னைதான். பாதாள சாக்கடை திட்டம் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்பது இதிலிருந்தே தெரிகிறது. நிவாரணம் என்ற பெயரில் பெயருக்கு சில இடங்களுக்கு வந்து செல்லும் மக்கள் பிரதிநிதிகள் மக்களை ஏமாற்றுகின்றனர்.
மஞ்சுளா: வீடுகள்தோறும் கழிவுநீர் புகுந்து காய்ச்சல் பரவதுவங்கிவிட்டது. ரோடுகளில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளங்களில் பச்சிளம் குழந்தைகள் விழுந்து பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராஜேஸ்வரி: தேர்தலின் போது மட்டுமே வரும் மக்கள் பிரதிநிதிகள் நாங்கள் கஷ்டப்படும்போதும் வந்து உரிய தீர்வு காணவேண்டும்.
- தினமலர் -