வெள்ளத்தை பார்வையிட்டு சென்ற மக்கள் பிரதிநிதிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு, ராமநாதபுரம் நகர்வாசிகள் மத்தியில் எழுந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் வெள்ளத்தில் மிதப்பது ராமநாதபுரத்தின் சோக கதையாகும். இந்த காலகட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் கார்களை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு பகுதிக்கு சென்று பார்ப்பதும், அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் சொல்வதும் வழக்கமாக நடந்து வருகிறது. வந்து சென்ற பின், அதை தடுக்கும் நடவடிக்கைகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் அவலத்தை பார்வையிட வருவதே இதற்கு சாட்சி. வறட்சியில் சிக்கியவர்களுக்கு உதவுவதை போல உணவுகள், ஆடைகள், பணம் வழங்குகின்றனர். இதனால் வீடுகளில் தேங்கிய மழைநீர் வடிந்து விடுமா? அதனால் சந்திக்கும் வேதனைகள் மறைந்துவிடுமா? இது போன்ற பாசாங்கு பரிகாரங்கள் செய்வதற்கு பதிலாக, ஹசன் அலி எம்.எல்.ஏ., போல வராமல் இருப்பதே மேல். இம்முறையும் மழையில் மூழ்கிய ராமநாதபுரம் மாவட்டத்தை அமைச்சர் தங்கவேலன், ரித்திஷ்குமார் எம்.பி., மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரராமவன்னி ஆகியோர் பார்வையிட்டுள்ளனர். அதன் பின் நாட்களும் கடந்துவிட்டன. இன்று வரை பல பகுதிகளில் நீரை வெளியேற்றும் நடவடிக் கைகள் மேற்கொள்ளவில்லை. நிவாரணம் பெற்றுதர அவர்கள் முன்வரும் பட்சத்தில், அதை வைத்து குளறுபடி செய்ய ஒரு கூட்டம் புறப்படுகிறது. அறிவிப்புக்கு முன்பே, நிவாரணம் பெற்றுத்தர வசூல் வேட்டை நடத்திய சம்பவமும் சமீபத்தில் தான் நடந்தது. நீரை வெளியேற்றுகிறோம் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் ரூபாய் கரைக்கப்படுகிறது. இப்படி ஒரு வருமானம் இருப்பதால் தான் , நிரந்தர தீர்வுக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறதோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இதுவரை நீரை வெளியேற்ற செய்த செலவில் அருமையான திட்டங்களை செயல்படுத்தியிருக்கலாம்.
மக்கள் பிரதிநிதிகளுக்கும் இது நன்றாக தெரியும். இவர்களாவது அடுத்த முறை பார்வையிடும் சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்வார்களா என்பதை பார்க்கலாம்
தினமலர்